Friday, January 28, 2011

மனதிற்குள் ஒரு மழைக் காலம் !

தனது அழுகையை
அலட்சியம் செய்திடும்
மக்களின் கவனம் ஈர்க்க
மின்சாரத்தை துண்டித்து விட்டு
ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது மழை!

கையில் மல்லிகையையும்
மன‌தில் மண்வாச‌னையையும்
சுமந்தபடி
வீட்டிற்குள் நுழைந்தேன் !

அள்ளிச் செருகிய சேலையோடு
அடுக்களையில் நின்றிருந்தாய்!
பக்கத்தில் பற்ற‌ வைத்திருந்த
விளக்கின் வெளிச்சத்தை
மேலும் அதிகப்படுத்தியபடி!!

தரையில்
படுக்கவைக்கப்பட்டிருந்த
ந‌ம் குழந்தை - மெல்ல
தவழ்ந்து வந்து
தன் பிஞ்சுக் கைகளை நீட்டி
உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறியடித்தபடி கண் விழித்தேன்!

யாருமற்ற என் அறையில்
சுற்றிலும் வெறுமை படர்ந்திருந்தது.
தூரத்தில்
என் கண்ணீர்த் துளிகளில் நனைந்து
கிடந்தது
உன் மணவோலை!!

(கடைசி பத்தியை இப்படியும் மாற்றிப் படிக்கலாம்)


உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறிய‌ என் அலாரத்தை நிறுத்திவிட்டு
மெல்ல மணி பார்த்தேன்.
மாலை 5.30!

இன்று எப்படியாவது
அவளிடம் சொல்லிவிட வேண்டும்
என் காதலை
எந்த பதற்றமுமின்றி!

மனதுக்குள் சொல்லிக்கொண்டு
அவசரமாய் கிள‌ம்பினேன்
அவள் கன்னங்களையொத்த‌
ஓர் ரோஜாவை ஏந்திக்கொண்டு!!

நாய்ப்பிழைப்பு

ஓடும் ரயிலை
ஓடிப் பிடித்ததில்
வசதியாய் கிடைத்து ஓர் இருக்கை.

என் அருகே, தினசரியை புரட்டியபடி
உலகப் பொருளாதாரம் முதல்
உள்ளூர் விவகாரம் வரை
அனைத்தையும் அலசிக்கொண்டிருந்தார்
என் அலுவலக நண்பரொருவர்.

"தெரியுமா?
நடனக் கலைஞரின் கையுறை ஒன்று
நாலு கோடிக்கு ஏலம் போனதாம்!
.....
.....
இங்க பாரு கொடுமைய..,
சாப்பாட்டுக்கு வழியில்லாம‌
தந்தையும்,மகளும் பட்டினிச் சாவாம்"

இரண்டையும்
எந்த வேறுபாடுமில்லாமல்
சொன்னவரிடம்,

"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்.."
அவசர, அவசரமாய் ஞாபகத்திற்கு வந்த‌
பாரதியின் வரியை அடக்கிக் கொண்டு
அவரிடம் கேட்டேன்..,

"சார், அஞ்சு நிமிஷம் ஆபிசுக்கு லேட்டாயிட்டா
ஹாப்ப டே லீவா ஆக்கிடமாட்டாங்களே"


" கடந்த வாரம் அல்லது 15 நாள்கள் இருக்கலாம், தினசரி ஒன்றில் நான் படிக்க நேர்ந்த செய்தி தான் அது "தந்தையும், மகளும் பட்டினியால் இறந்தனர்" என்பது. ஒருவேளைப் பசியே நம்மை பாடாய்படுத்தும் போது, 'பசியால் மரணம்' என்னை அதிர்ச்சியுறச் செய்தது.வேறேதும் செய்ய இயலாத நான், அதையே சற்று கற்பனைக் கலந்து கவிதையாக்க முயன்றுள்ளேன். ."

பகுத்தறிவுவாதி

அரசு அறிவிப்பு 1:

"மின்சார வெட்டு
குறைந்தபட்சம்
நகரங்களில் 2 மணி நேரம்
கிராமங்களில் 6 மணி நேரம்"

மக்களின் சமாதானம்:
" நல்ல வேளை,
மெழுகுவர்த்தியும்
கொசுவர்த்தியும்
விலையேறவில்லை
மற்றபடி மேட்ச் தான் பார்க்க முடியாது"

அரசு அறிவிப்பு 2:
" மளிகைப் பொருள்களின்
விலை உயர்வு"

மக்களின் சமாதானம்:
"கிலோ அரிசி ரூ.1/‍ தான்"

அரசு அறிவிப்பு 3:

பெட்ரோல் விலை உயர்வு

மக்களின் சமாதானம்:

டீசல் விலை உயரவில்லை

செய்தி :
"கோடிகளில் நஷ்டம்;
வரலாறு காணாத‌ ஊழல்"

மக்களின் சமாதானம்:

"யார் தான் செய்யவில்லை"

செய்தி:
" ஓட்டுக்கு இனி காசு இல்லை"
சொன்னவனின் சட்டையைப் பிடித்து
ஓங்கிக் கேட்டான்,
இனமானத் தமிழன்
பகுத்தறிவுப் பகலவனின் வாரிசு
"ஏன்?" என்று