Tuesday, October 5, 2010

மழைக் காலம் !

ஒரு மழைக்கால
மாலைவேளையில்
மரத்தடியில் அமர்ந்திருந்தோம் நாம்!

நாமிருவரும் மௌனத்தை
அழகாய் நெய்து கொண்டிருக்கையில்,

நமக்கான வார்த்தைகளை
சத்தமாய்ப் பேசிக்கொண்டிருந்தது மழை!

தோழி !

அறிவேன் தோழி,
நான் ஒரு தீக்குச்சி சூரியன் என்று!
என்னுள் இருக்கும் வெப்பமும்
எனக்கு தெரியும்!

பற்றி எரிய எனக்கு
பாஸ்பரஸ் தேவையில்லை,
பரஸ்பரம் பேசி கொள்ள
உன் நட்பு போதும்!

மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்ட
ஆலமர விதை நான்!
என்க்கு நட்பு என்னும் நீரூற்றி
அக்கறை எனும் வேலி கட்டுகிறாய்.

நிச்சயம் ஒரு நாள்- நான்
விழுதுகள் இறக்கி விருட்சமாவேன்!
அப்போது இந்த உலகிற்கு சொல்வேன்
இந்த மரத்தின் வேர் - நீ என்று!!

'சிங்கம், தான் ஒரு சிங்கம் என்று
உணராதவரை ஒருபோதும்
கர்ஜிக்கமுடியாது!!'

இப்போது புரிகிறது
உனது தன்னம்பிக்கை போதனை.
இனி நான் இந்த உலகை வெல்வேன் அதை
விரைவில் உனக்கு சொல்வேன்!!

மௌன வார்த்தைகள் !

கரைகளில் அமர்ந்தபடி
பார்த்துக்கொண்டிருந்தோம்
நம் மனதின் வார்த்தைகள்
அலைகளில் பயணித்து
கடலேறிச் செல்வதை !


என் வார்த்தைகள்
ஜெயிக்க வேண்டுமென்று நீயும்
உன் வார்த்தைகள்
ஜெயிக்கவேண்டுமென்று நானும்
போட்டியின் முடிவை
படபடப்போடு
பார்த்துக்கொண்டிருந்தாலும்..,

உன் ஒரு கையால்
மணல் அள்ளி
அம்மணலிலேயே
போட்டுக்கொண்டிருந்தாய் -
கடலிலிருந்து நீர் அள்ளி
மீண்டும் அக்கடலிலேயே
கொட்டிவிடும் மழை மேகம் போல!

விடை தெரிந்திருந்தும்
சிறு குழந்தை போல
சட்டென்று நீ கேட்டாய்
'மதியத்தில் மட்டும் ஏனிந்த மணல்
இப்படி சுடுகின்றது' என்று!

நான் சொன்னேன்

'உன் பாதச்சுவடுப்படாத
தங்கள் மேல்
உன் நிழலின்
சுவடாவது படுகின்றதே
என்று அவைகள்
சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்க
நீயோ நண்பகல் வந்தால்...
அந்த கோபத்தினால் தான் சுடுகின்றது' என்று.

சற்றே முறைத்தபடி
"உங்கள..." என்று செல்லமாய்
அடிக்க வந்தாய்!

அடுத்த நொடியே
மணல் சுட ஆரம்பித்தது.

இந்த மாலை நேரத்தில்
இப்படி மணல் சுட
என் மேல் அவைகளுக்குண்டான
பொறாமையே காரணம்!!

அந்தி செவ்வானம்!

ஆயிரம் சம்பாஷணைகள்
உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தாலும்
மெளனத்தை பேசவிட்டு விட்டு,
சாலையோரமாய்
சென்று கொண்டிருந்தோம் நாம்!

'விடுகதை ஒன்று கேட்கட்டுமா?' என்றபடியே,
மரங்களில் எது ஆண் மரம்
தெரியுமா என்றாய்? '
காற்றோடு விளையாடிக்கொண்டிருந்த
உன் காதோர முடியை சரிசெய்தபடி..!

நான் சொன்னேன்
'தெரியாது' என்று!

நீ சொன்னாய்,
ஆலமரம்தான் அது,
ஏனென்றால் அதுதான்
விழுதுகள் எனும்
தாடி வளர்த்திருக்கிறதே'
என்றாய் சிரித்தபடி!

சற்றே பயந்தாற்போல்
நான் சொன்னேன்,
'இப்படி கன்னத்தில் குழிவிழ
அழகாய்
நீ சிரிப்பதை பார்த்தால்
எல்லா மரங்களுமே
ஆணாகிவிட கூடுமென்று...!'

சட்டென்று
உன் கன்னம் சிவந்து
மறைந்ததை
பொறாமையோடு
பார்த்துக்கொண்டிருந்தது
அந்தி செவ்வானம்!!!

கனவு வீடு!

கயிற்றின் மேல்
நடப்பதை போல - மிக
கவனமானது
உன்னோடான எனது உறவு!

இலவமா? ஈச்சமா?
தெரியாமலே
காத்திருக்க தொடங்கிவிட்டேன்
உன்னோடு வாழ...

மணப்பாயா?
மறுதலிப்பாயா?
படபடக்கும் இதயத்தோடு
பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்
நீ வரும் பாதையை....

ஒருவேளை..,
நீ வராவிட்டாலும் கூட
தயவுசெய்து கலைத்துவிடாதே..,

கடற்கரையில்
நம் குழந்தைகளோடு
நான் கட்டிக்கொண்டிருக்கும்
எனது "கனவு வீட்டை"!!

மழைக் காதலி !

அலுவலகம் முடிந்தவுடன்
ஆசையாய் வீடு திரும்பினேன்,
உன்னை பார்ப்பதற்காக!

எனக்கு முன்பே
வந்துவிட்ட நீ,

குடையிருந்தும்
மழையில் நனைந்ததை
என்னிடம் மறைப்பதற்காக
குளித்துவிட்டு
ஈரக் கூந்தலோடு
அமர்ந்திருந்தாய்
ஜன்னலின் முன்பு,
கண்களை மூடியபடி!!

இதென்ன மழையோடு ஓர் கண்ணாமூச்சி?

மழையை பார்க்க வேண்டும்,
கேட்ககூடாதென்றேன்
மூடியிருந்த உன் கண்களை
என் கைகளால் மூடியபடி!

நீ சொன்னாய்,
இல்லை,

"சுழலுகின்ற பூமியின் மீது
மழையின் ஊசிக்கரங்கள்
தொடும்போதெல்லாம்
பூமி தன்னுள் ஒளிந்திருக்கும் மெல்லிசையை
வெளிப்படுத்துகிறது ஒரு
இசைத்தட்டைப் போல"
என்றாய்!

இதை நீ சொல்லி முடித்தவுடன்,
பலத்த கைத்தட்டல் ஓசையோடு
பொழியத் தொடங்கியது மழை
என் மனதிற்குள்ளும்!!


ஊஞ்சல் !

மழை ஓய்ந்த - ஓர்
மார்கழி மாதத்து மாலை நேரம்

மழைப் பாட்டை பாடியபடி,
சுற்றி அமர்ந்து
பனிக்காற்று
குளிர் காய்ந்து கொண்டிருந்த ஒரு
தெரு விளக்கின் கீழ்
நடந்து கொண்டிருந்தோம்!

'ரொம்ப குளிருதுல்ல..' என்றாய்,
இரண்டு கைகளையும்
குறுக்கியபடி.

சட்டென்று கூக்குரல்
ஒன்று கேட்டது..

அது வேறொன்றுமில்லை
இவ்வளவு நேரமாய் - நீ
கைகளை வீசி
நடந்து கொண்டிருந்ததால்,
உன் கையின் நிழலை
ஊஞ்சலாட்டிக் கொண்டிருந்த
என் கைநிழல் - சட்டென்று
உன் கைநிழல் காணாமல் போய்விட்டதால்
எழுப்பிய கூக்குரல்தான் அது
என்று தெரிந்ததும்

அதை சமாதானப்படுத்த - நீ
உன் கை நிழலின் மடியில்
அமரவைத்தாய்
என் கையின் நிழலை!!

நிலவுக் கவிதை !

மணம் மயக்கும்
மல்லிகை பூக்கும் – ஒரு
மாலை நேரத்தில்
பேருந்தின்
ஜன்னலோரத்தில் அமர்ந்திருந்தேன்
உன்னை நினைத்தபடி!

சிவக்க தொடங்கிய வானம்
தனக்கான கம்பள
விரிப்பென்ற
கர்வத்தோடு
மேகப் படியேறி
வான மேடைக்கு வந்தது நிலா
இரவு சொற்பொழிவாற்ற!

அதன் கர்வம் கண்டு
சிரித்திட்ட என்னிடம்
காரணம் கேட்ட நிலவிடம்
சொன்னேன் உன்னை பற்றி!

அலங்காரம் ஏதுமின்றி
அழகாய் இருந்தும்
அகங்காரம் ஏதுமற்ற
பேரழகு பெண்ணே
உன்னை பற்றி ஓர் ரகசியம்!

உனக்கே தெரியாத ஓர் ரகசியம்!!

உன் வீட்டருகே பூத்திருக்கும்
சிவப்பு ரோஜா – உண்மையில்
விடிந்தவுடன் உன்னை காண
விடிய விடிய விழித்ததனால்
கண் சிவந்துவிட்ட ஓர்
வெள்ளை ரோஜா என்ற ரகசியம்!!

அவ்வளவுதான்,
உன்னை பற்றி
இன்னும் சொல், இன்னும் சொல்
என்றபடி –

என்
பேருந்தின் கூடவே
ஓடி வந்தது நிலா,

முன்பொருமுறை
உன் உள்ளங்கையில் நீ
வைத்திருந்த
மருதாணி போல்
செக்க செவேலென்று
சிவக்கத்தொடங்கிய
சூரியன் வானில் தோன்றும் வரை!!

அறிந்ததும் அறியாததும் !

வெறும் காகிதப் பூக்கள்
என் கவிதைகள்!

உன் உதடுகளால்
உச்சரிக்கப்படும் போது
அவை வாசம் மட்டும் பெறுவதில்லை
சுவாசமும் பெறுகின்றன!!

கூட்டுப் புழுக்களாய் – என்
நோட்டுப் புத்தகத்தில்
உறங்கிக் கிடந்த
வார்த்தைகள் யாவும்
நீ வாசித்து போன பின்
வண்ணத்துப் பூச்சிகளாய்
பறக்கத் தொடங்கின
என் அறை முழுவதும்!!

கால் பட்டதால்
கல்லொன்று
உருப் பெற்ற கதை நானறிவேன்! – உன்
கண் பட்டதால்
சொல்லொன்று
உயிர் பெற்றதை அன்று முதலே அறிந்தேன்!!

கனாக் கண்டேன் !

மலைக் காற்று இறங்கி வந்து
மனம் மயக்கும் - ஓர் மாலை நேரத்தில்

கண்மூடி நான் சென்ற
ஜன்னலோர ரயில்பயணத்தில்
கண்ட கனவொன்று
சொல்கிறேன் கேள்!

வண்டுகள் வடிவமைத்த
வழக்காடு மன்றத்தில்
வகைத்தெரியாமல்
நின்றிருந்தேன் நான்
குற்றவாளிக்கூண்டில்!!

வழக்கென்ன தெரியுமா?

மலர்களில் தேனெடுக்க முடியாமல்
வண்டுகள்,
மயக்கமடைய காரணமாயிருந்தேனாம்!

எப்படி என்கிறாயா?

பூக்களுக்கு
நான் கற்பித்த
புதுமொழியின் இனிமையாலே
வண்டுகள் மயங்கிவிடுகின்றனவாம்!!

அந்த புதுமொழி
எதுவென்று தெரியுமா?

அன்றொரு நாள்
ஓர் பேருந்துப் பயணத்தில்
உன் முன்னிருக்கை
குழந்தையோடு - நீ
பேசிக்கொண்டிருந்த
கொஞ்சல் வார்த்தைகளைத்தான்
புது மொழியாய்
கற்பித்தேன் நான்
என்ற உண்மை அறிந்த பின்பே
விடுதலை அடைந்தேன்,

அந்த அழகான
கனவிலிருந்தும்!!

அலை ஓசை!

கைகளில் ஒட்டியிருந்த
மணல் துகள்களைத் தட்டியபடி
"நேரமாச்சு, போகலாம் " என்றெழுந்தாய்!

பலத்த சத்தத்தோடு வந்த
அலைக் காற்று ஒன்று - உன்
காதோரக் கூந்தலை கலைத்துச் சென்றது !

"இன்று அலையின் ஓசை
அதிகமாய் உள்ளதே " என்றாய் !

'அது வேறொன்றுமில்லை ‍‍‍
நீ, உன் கை மணலை தட்டியதை
பார்த்துவிட்ட அலை ஒன்று
தன்னை ரசித்து நீ கை தட்டியதாக
எண்ணிக்கொண்ட சந்தோசக்
கூக்குரல்தான் அது என்றேன்!!

"ஆரம்பிச்சுட்டீங்களா ..."என்றபடி
நீ ஆரம்பித்தாய்
உன்கவிதையை ,

அது அப்படி அல்ல ...

" கடலின் மேற்பரப்பில்
காற்று எழுதி அனுப்பும்
கவிதை வரிகளுக்கான
கை தட்டல் தான்
இந்தஅலை ஓசை! " - என்றாய் !!

உடனே ஒரு
செல்ல அலை வந்து
உன் பாத விரல்களை
முத்தமிட்டுச் சென்றது
என் சார்பாக...!!

மனதிற்குள் ஒரு மழைக்காலம் !

தனது அழுகையை
அலட்சியம் செய்திடும்
மக்களின் கவனம் ஈர்க்க
மின்சாரத்தை துண்டித்து விட்டு
ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது மழை!

கையில் மல்லிகையையும்
மன‌தில் மண்வாச‌னையையும்
சுமந்தபடி
வீட்டிற்குள் நுழைந்தேன் !

அள்ளிச் செருகிய சேலையோடு
அடுக்களையில் நின்றிருந்தாய்!
பக்கத்தில் பற்ற‌ வைத்திருந்த
விளக்கின் வெளிச்சத்தை
மேலும் அதிகப்படுத்தியபடி!!

தரையில்
படுக்கவைக்கப்பட்டிருந்த
ந‌ம் குழந்தை - மெல்ல
தவழ்ந்து வந்து
தன் பிஞ்சுக் கைகளை நீட்டி
உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறியடித்தபடி கண் விழித்தேன்!

யாருமற்ற என் அறையில்
சுற்றிலும் வெறுமை படர்ந்திருந்தது.
தூரத்தில்
என் கண்ணீர்த் துளிகளில் நனைந்து
கிடந்தது
உன் மணவோலை!!

(கடைசி பத்தியை இப்படியும் மாற்றிப் படிக்கலாம்)


உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறிய‌ என் அலாரத்தை நிறுத்திவிட்டு
மெல்ல மணி பார்த்தேன்.
மாலை 5.30!

இன்று எப்படியாவது
அவளிடம் சொல்லிவிட வேண்டும்
என் காதலை
எந்த பதற்றமுமின்றி!

மனதுக்குள் சொல்லிக்கொண்டு
அவசரமாய் கிள‌ம்பினேன்
அவள் கன்னங்களையொத்த‌
ஓர் ரோஜாவை ஏந்திக்கொண்டு!!


Sunday, March 28, 2010

இரவின் கடிதம்!















பிரிந்துவிட்ட
காதலர்களாய்
இரவும் பகலும்!

அழுது சிவந்த கண்களே,
அந்தி செவ்வானமாய்,

நிலவில் மை தொட்டு
கரு வான காகிதத்தில்
கடிதமொன்று எழுதத் தொடங்கியது இரவு!

சிந்தித்து எழுதுகையில்
சிதறிய மைத்துளிகளே
நட்சத்திரங்களாய்!

விடிய விடிய யோசித்தும்
விளங்க வைக்கும்
வார்த்தை ஏதும் சிக்காததால்
இரவு வடித்த கண்ணீரே
பனித்துளிகளாய்!!

சிப்பிக்குள் விழுந்த
மழைத் துளி முத்தாவது போல்
இரவு கண்ணீரின்
ஒரு துளி மட்டும்
வித்தாகிப் பின் விருட்சமானது!!

இரவின் புலம்பல்களை எல்லாம் - அது
பூக்களாய் பூக்கச்செய்தது
பகல் வந்து படிப்பதற்கு!!


பகல் வந்து படித்துவிட்டு
போனதே தெரியாமல்
மீண்டும்
மீண்டும்
மடல் எழுதி கொண்டே இருக்கிறது
இரவு,

மை தீர, தீர
நிரப்பி,நிரப்பி
வளர்பிறை,
தேய்பிறைகளாய்!!

புள்ளிக் கோலம் !




















மழை கொடுத்து
மண் காக்கும்
மாரி அம்மன்
திருவீதி உலா வரும் – ஒரு
சித்திரை திருநாளில்,

மழை கழுவிய
தார் சாலை போல்,
வாசல் தெளித்த வீதியில்,

அள்ளி செருகிய சேலையோடு
நீ போட்ட
புள்ளி கோலத்தின் முன்
உற்சவ அம்மனே
சற்று நேரம்
நின்று சென்றதை
பார்த்து விட்ட வானம்

தானும் புள்ளி மட்டும்
வைத்து விட்டு
கிண்ணம் நிறைய மாவோடு
உனக்காக காத்திருக்கிறது
கோலமிட
கற்றுத் தர நீ
வருவாயென
நிலவும் நட்சத்திரங்களுமாய்!!

Saturday, March 27, 2010

பனித்துளி


வான வயலில்
உழுவதற்கு முன்
சூரிய உழவன்
பருகும் நீராகராமோ
பனித்துளி!