Tuesday, October 5, 2010

மனதிற்குள் ஒரு மழைக்காலம் !

தனது அழுகையை
அலட்சியம் செய்திடும்
மக்களின் கவனம் ஈர்க்க
மின்சாரத்தை துண்டித்து விட்டு
ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது மழை!

கையில் மல்லிகையையும்
மன‌தில் மண்வாச‌னையையும்
சுமந்தபடி
வீட்டிற்குள் நுழைந்தேன் !

அள்ளிச் செருகிய சேலையோடு
அடுக்களையில் நின்றிருந்தாய்!
பக்கத்தில் பற்ற‌ வைத்திருந்த
விளக்கின் வெளிச்சத்தை
மேலும் அதிகப்படுத்தியபடி!!

தரையில்
படுக்கவைக்கப்பட்டிருந்த
ந‌ம் குழந்தை - மெல்ல
தவழ்ந்து வந்து
தன் பிஞ்சுக் கைகளை நீட்டி
உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறியடித்தபடி கண் விழித்தேன்!

யாருமற்ற என் அறையில்
சுற்றிலும் வெறுமை படர்ந்திருந்தது.
தூரத்தில்
என் கண்ணீர்த் துளிகளில் நனைந்து
கிடந்தது
உன் மணவோலை!!

(கடைசி பத்தியை இப்படியும் மாற்றிப் படிக்கலாம்)


உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறிய‌ என் அலாரத்தை நிறுத்திவிட்டு
மெல்ல மணி பார்த்தேன்.
மாலை 5.30!

இன்று எப்படியாவது
அவளிடம் சொல்லிவிட வேண்டும்
என் காதலை
எந்த பதற்றமுமின்றி!

மனதுக்குள் சொல்லிக்கொண்டு
அவசரமாய் கிள‌ம்பினேன்
அவள் கன்னங்களையொத்த‌
ஓர் ரோஜாவை ஏந்திக்கொண்டு!!


No comments: