Tuesday, October 5, 2010

கனாக் கண்டேன் !

மலைக் காற்று இறங்கி வந்து
மனம் மயக்கும் - ஓர் மாலை நேரத்தில்

கண்மூடி நான் சென்ற
ஜன்னலோர ரயில்பயணத்தில்
கண்ட கனவொன்று
சொல்கிறேன் கேள்!

வண்டுகள் வடிவமைத்த
வழக்காடு மன்றத்தில்
வகைத்தெரியாமல்
நின்றிருந்தேன் நான்
குற்றவாளிக்கூண்டில்!!

வழக்கென்ன தெரியுமா?

மலர்களில் தேனெடுக்க முடியாமல்
வண்டுகள்,
மயக்கமடைய காரணமாயிருந்தேனாம்!

எப்படி என்கிறாயா?

பூக்களுக்கு
நான் கற்பித்த
புதுமொழியின் இனிமையாலே
வண்டுகள் மயங்கிவிடுகின்றனவாம்!!

அந்த புதுமொழி
எதுவென்று தெரியுமா?

அன்றொரு நாள்
ஓர் பேருந்துப் பயணத்தில்
உன் முன்னிருக்கை
குழந்தையோடு - நீ
பேசிக்கொண்டிருந்த
கொஞ்சல் வார்த்தைகளைத்தான்
புது மொழியாய்
கற்பித்தேன் நான்
என்ற உண்மை அறிந்த பின்பே
விடுதலை அடைந்தேன்,

அந்த அழகான
கனவிலிருந்தும்!!

No comments: