Tuesday, October 5, 2010

அலை ஓசை!

கைகளில் ஒட்டியிருந்த
மணல் துகள்களைத் தட்டியபடி
"நேரமாச்சு, போகலாம் " என்றெழுந்தாய்!

பலத்த சத்தத்தோடு வந்த
அலைக் காற்று ஒன்று - உன்
காதோரக் கூந்தலை கலைத்துச் சென்றது !

"இன்று அலையின் ஓசை
அதிகமாய் உள்ளதே " என்றாய் !

'அது வேறொன்றுமில்லை ‍‍‍
நீ, உன் கை மணலை தட்டியதை
பார்த்துவிட்ட அலை ஒன்று
தன்னை ரசித்து நீ கை தட்டியதாக
எண்ணிக்கொண்ட சந்தோசக்
கூக்குரல்தான் அது என்றேன்!!

"ஆரம்பிச்சுட்டீங்களா ..."என்றபடி
நீ ஆரம்பித்தாய்
உன்கவிதையை ,

அது அப்படி அல்ல ...

" கடலின் மேற்பரப்பில்
காற்று எழுதி அனுப்பும்
கவிதை வரிகளுக்கான
கை தட்டல் தான்
இந்தஅலை ஓசை! " - என்றாய் !!

உடனே ஒரு
செல்ல அலை வந்து
உன் பாத விரல்களை
முத்தமிட்டுச் சென்றது
என் சார்பாக...!!

No comments: