Friday, October 5, 2012

தங்கை நிலா! -2

க‌ண்ணீர் துளிக‌ளால்
மை நிரப்பி எழுதும் என் பேனா
உன்னைப் ப‌ற்றி
எழுதும் போது ம‌ட்டும்
பூக்க‌ளின் சாற்றை
நிர‌ப்பிக் கொள்வ‌து எப்ப‌டி..?
என்ப‌து புரியாம‌லே எழுத‌த்தொட‌ங்குகிறேன்.

சிறுவ‌ய‌தில் நீ
சில்லாக்கு விளையாடிவிட்டு
வீசியெறிந்த‌ வ‌ட்ட‌க்க‌ல்தான்
நிலா ஆன‌து என்ப‌தும்

நீ ப‌ல்லாங்குழி
விளையாடுவ‌த‌ற்கு காய்க‌ளாக‌
நான் ந‌ட்ச‌த்திர‌ங்க‌ளை
ப‌றித்துக்கொடுத்த‌தும்

நீயும் நானும் ம‌ட்டும்
அறிந்த‌ ர‌க‌சிய‌ங்க‌ள் !

தேவ‌தைக‌ளின் ச‌ங்கீத‌மாய்
உன் சிரிப்பொலியும்
தேர்க‌ளின் ஊர்வ‌ல‌மாய்
உன் கொலுசொலியும்
எங்களை சுற்றி சுற்றி வ‌ந்த‌து.

எங்களது வாழ்வில்
வண்ணத்துப்பூச்சியாய்
வசந்தக்காலத்தில் மட்டுமல்ல‌
எந்தக் காலத்திலும் நீ இருந்தாய்!

ப‌டிப்பு முடிந்து,பிழைப்பை தேடி
உன்னை விட்டு, ஊரைவிட்டு
ப‌ட்டண‌த்தில் நான் வாழ்ந்த‌போது

உயிர‌ற்ற‌ ப‌ண்டிகை நாட்க‌ள்
உயிர்பெறுவ‌து ‍ நான்
உன்னோடு தொலைபேசியில்
உரையாடும் ஒரு சில‌ நிமிட‌ங்க‌ள் ம‌ட்டுமே!!

பின்னொரு நாளில்
காத‌லில் தோல்வியுற்று நான்
க‌ண்ணீரில் க‌ரைந்துகொண்டிருந்த‌ போது
உன் க‌வ‌ன‌மான‌ வார்த்தைக‌ள் தான்
என் கண்ணீர்த்துளிகளை
கவிதை முத்துக்களாக்கியது.

அதுவ‌ரை
அறியாப் பெண்ணாய்
ஆசை த‌ங்கையாய் ம‌ட்டுமிருந்த‌ நீ
அன்றுமுதல் என் தோழியுமானாய்!

இன்று ம‌ண‌முடித்து
ம‌றுவீடு செல்லுகையில்
திரண்டிருந்த என் கண்ணீரை
க‌ண்டுவிட்ட‌ நீ
மெல்ல உன் கண்ணீரை
மறைத்துவிட்டு
என் விழி துடைத்து,
த‌லைகோதிய‌ அந்த‌ நொடி
நீ என் தாயுமானாய் என்பதை
உன‌க்கு எப்ப‌டி சொல்வ‌து என்று
புரியாமல் முடிக்கின்றேன்
இக்கவிதையை...!

No comments: