Friday, October 5, 2012

கண்ணீரின் அடர்த்தி!

மாநகராட்சி பேருந்து நிறுத்தம்.

"ஸ்ஸ்..கூல்ல புள்ளய‌
வெளியே அனுப்பிட்டாங்க‌
யூனிபாம் வாங்கணும்
கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி...."
என்று கேட்டபடி
என்னருகில் வந்து நின்ற
வயதான பாட்டியின் குரலும்
அருகில் நின்றிருந்த
சிறு தேவதையின் முகமும்,
பரிதாப‌ அலைகளை
என்னுள் அரங்கேற்ற‌த் தொடங்கின.

பல முறை அறியப்பட்டவைதான்
இது போன்ற வார்த்தைகள்
என்றாலும் ‍‍‍ இந்த முறை
வார்த்தையில் வழிந்தோடிய உண்மை
சற்று தடுமாறச் செய்த போதும்,
இல்லாத இமை கொண்டு
மனதை மூடச்செய்தது
மாசக் கடைசி!

உதவ முடியாத குற்ற உணர்ச்சி
உந்தித் தள்ள
வந்து நின்ற பேருந்தில்
அடித்து பிடித்து உள் நுழைந்தேன்!

நெரிசலின் வழி
நிறுத்தத்தில் இறங்கி
நடக்கத் தொடங்கியபோ....,
சட்டென்று அதிர்ந்தேன்.
எனது மிச்ச சொச்சப் பணமும்
களவாடப்பட்டிருந்தது..!

என்னில் வழியத்தொடங்கிய‌
கண்ணீர்
பணம் பறிகொடுத்ததற்காக‌
மட்டும் அல்ல என்பதை
உணரச் செய்தது
அதன் அடர்த்தி!

No comments: