Friday, October 5, 2012

கண்ணீரின் அடர்த்தி!

மாநகராட்சி பேருந்து நிறுத்தம்.

"ஸ்ஸ்..கூல்ல புள்ளய‌
வெளியே அனுப்பிட்டாங்க‌
யூனிபாம் வாங்கணும்
கொஞ்சம் உதவி பண்ணுங்க தம்பி...."
என்று கேட்டபடி
என்னருகில் வந்து நின்ற
வயதான பாட்டியின் குரலும்
அருகில் நின்றிருந்த
சிறு தேவதையின் முகமும்,
பரிதாப‌ அலைகளை
என்னுள் அரங்கேற்ற‌த் தொடங்கின.

பல முறை அறியப்பட்டவைதான்
இது போன்ற வார்த்தைகள்
என்றாலும் ‍‍‍ இந்த முறை
வார்த்தையில் வழிந்தோடிய உண்மை
சற்று தடுமாறச் செய்த போதும்,
இல்லாத இமை கொண்டு
மனதை மூடச்செய்தது
மாசக் கடைசி!

உதவ முடியாத குற்ற உணர்ச்சி
உந்தித் தள்ள
வந்து நின்ற பேருந்தில்
அடித்து பிடித்து உள் நுழைந்தேன்!

நெரிசலின் வழி
நிறுத்தத்தில் இறங்கி
நடக்கத் தொடங்கியபோ....,
சட்டென்று அதிர்ந்தேன்.
எனது மிச்ச சொச்சப் பணமும்
களவாடப்பட்டிருந்தது..!

என்னில் வழியத்தொடங்கிய‌
கண்ணீர்
பணம் பறிகொடுத்ததற்காக‌
மட்டும் அல்ல என்பதை
உணரச் செய்தது
அதன் அடர்த்தி!

நிழலும்,நன்னீரும்!

முன்பெல்லாம்..,
கோபப்பார்வை ஒன்று போதும்
நான் கொழுந்துவிட்டு எரிய!
இன்றோ
ஆசை ஆசையாய்
அள்ளிச் சேர்க்கிறேன் உன்
அனல் வார்த்தைகளை!!

என் நினைவு அல‌மாரியில்
ர‌சித்துக் கொண்டே
சேக‌ரிக்க‌த் தொட‌ங்கிவிட்டேன்
உன் கோப‌த் த‌ருண‌ங்க‌ளை,
த‌டுக்கிவிழுந்துவிட்ட த‌ரையை
த‌ன் கையால்
அடித்து அழும் குழ‌ந்தையை
ஆசையோடு அணைத்துக்கொள்ளும்
ஓர் அன்னையைப் போல‌!!

உன்னிட‌மிருந்தே க‌ற்றுக்கொண்டேன்,
காய‌ப்ப‌டுத்தும் வார்த்தைக‌ள்கூட‌
க‌டின‌மாய் இல்லை
என் தாய்மொழியில் என்ப‌தையும்!!

நிழ‌லும், ந‌ன்னீரும் தான்
இனிமை என்றால்,
வெயிலையும், வெந்நீரையும்
என்ன‌வென்று சொல்வது
.
.
குளிர்கால‌த்தில்!?!

காதல் என்பது!

காதலர் தினத்தில்
ஒரு காதல் கவிதையாவது
எழுதாவிட்டால்
எப்படி...?

அவசரமாய் காகிதம் எடுத்து
அழகாய் எழுதத் தொடங்கினேன்,

" காதல் என்பது....
......ம்ம்...."
வார்த்தை ஒன்றும் சிக்கவில்லை.

பக்கத்து அறை
தொலைக்காட்சி
கவனத்தை கலைத்தது.

அதில் அடுக்கடுக்காய்
அரங்கேற்றப்பட்டன‌
இளைஞர், இளைஞிகளின்
அனல் பறக்கும் விவாதங்கள்.

சற்று நேரத்திலெல்லாம்
தொலைக்காட்சியை
அணைத்துவிட்டு
மீண்டும் வந்த‌மர்ந்தேன்
கவிதை எழுத.

"காதலை
முதலில் சொல்வது யார்?
முதலில் பிரிவது யார்?

......."
நீல நிற உடையணிந்த பெண்ணின் குரல்
கவனத்தில் வந்து போனது.

ம்.. கவனம், கவனம்
கவனத்தை குவி.

" காதல் என்பது..."

"காதலர் தினம்
நம் கலாசாரமா?

உயரமாய் வளர்ந்திருந்தவனின்
கணீர் குரல்
காதுகளையே
சுற்றி, சுற்றி வந்தது.

ம்ஹூம்.. நமக்கு கவிதை வேண்டும்.
கவனத்தை திருப்பு.

சரி..சரி,
"காதல் என்பது..."

" அதிகமாய்
காதலில் வீழ்ந்தவர் யார்?
வீழ்ந்து மீண்டவர் யார்? ‍

வஞ்சித்தோர் யார்?
வஞ்சிக்கப்பட்டோர் யார்? "

விவாதித்தோரின்
கேள்வி அலைகள்
ஓடிக்கொண்டேயிருந்தன மனத்திரையில்

என்ன தான் வேண்டும் இவர்களுக்கு..
எதைத்தான் எழுதுவது நான்.
பேனாவை மூடி வைத்துவிட்டு
வெளியேறினேன்.

அங்கே
பக்கத்து அறையில்
படுக்கையில் வீழ்ந்திருந்த‌
தாத்தாவின் வாய் ஒழுகலை
துடைத்துவிட்டு
வேறு சட்டையை மாற்றிவிட்டு
வந்த பாட்டி என்னை கண்டதும்
"அவர் எப்பவும்
தன்னை சுத்தமாய்
வைத்துக் கொள்வார்.
எச்சி ஒழுகினால் அவருக்கு பிடிக்காது. அதான்" என்றாள்.

சொல்லிக்கொண்டிருக்கும் போது
பாட்டியின் கலங்கிய கண்களில்
வழிந்து கொண்டிருந்த லேசான பெருமிதம்
மெல்ல எழுதத் தொடங்கியது
என் கவிதையின் வரிகளை..

"காதல் என்பது
தேடுத‌ல் அல்ல‌
வாழுதல்...!"

Monday, May 21, 2012

வாழையடி வாழை!


(நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வாழ்த்து மடலாக எழுதியது)

ஒருவரோடு ஒருவராய் வாழுங்கள்
ஒருவருக்கு ஒருவராய் வாழுங்கள் .. ஆனால்
அவரவரின் தனித்தன்மைகளோடு !

வலது, இடது கைகளே கை கோர்த்து
நடக்க அனுமதிக்கும் ஒரே திசையில்.
வலதும்,வலதும் .. இடதும்,இடதும் அல்ல!
வேறுபாடுகளை அனுமதியுங்கள்
மன வேறுபாடு ஏதுமில்லாமல்!

மாலைச் சூரியன் அள்ளி வீசும்
மஞ்சள் ஒளியே _ மகரந்தத் தூளாய்
காலைத் தாமரைக்குள் மறைந்திருப்பது போல‌
ஒருவர் மனதை ஒருவர் அறிந்தேயிருங்கள்
மறைவாக மனதிற்குள்!

தாகங்கொண்ட மானிரண்டு
நீர் அருந்தியும் தீர்ந்து போகாத நீர்க்குட்டை
கதை போன்று _ விட்டுக் கொடுங்கள்
உங்கள் விருப்பங்கள் நிறைவேறாத போதும்!

அது சரி, இந்த கவிதைத் தாள்
காணாமல் போய்விட்டால்..?
கவலையை விடுங்கள்,
காதலோடு வாழுங்கள் காலம், காலமாய்...


[குறிப்பு : வலது, இடது கைகள் பற்றிய வரிகள் குறுஞ்செய்தியில் படித்தேன். இந்த வரிகளுக்குப் பொருத்தமாய் இருந்ததால் இங்கு பயன்படுத்திக் கொண்டேன்.)

( நண்பர் ஒருவரின் திருமணத்திற்கு வாழ்த்து மடலாக எழுதியது)

Friday, January 28, 2011

மனதிற்குள் ஒரு மழைக் காலம் !

தனது அழுகையை
அலட்சியம் செய்திடும்
மக்களின் கவனம் ஈர்க்க
மின்சாரத்தை துண்டித்து விட்டு
ஈரம் சொட்டிக்கொண்டிருந்தது மழை!

கையில் மல்லிகையையும்
மன‌தில் மண்வாச‌னையையும்
சுமந்தபடி
வீட்டிற்குள் நுழைந்தேன் !

அள்ளிச் செருகிய சேலையோடு
அடுக்களையில் நின்றிருந்தாய்!
பக்கத்தில் பற்ற‌ வைத்திருந்த
விளக்கின் வெளிச்சத்தை
மேலும் அதிகப்படுத்தியபடி!!

தரையில்
படுக்கவைக்கப்பட்டிருந்த
ந‌ம் குழந்தை - மெல்ல
தவழ்ந்து வந்து
தன் பிஞ்சுக் கைகளை நீட்டி
உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறியடித்தபடி கண் விழித்தேன்!

யாருமற்ற என் அறையில்
சுற்றிலும் வெறுமை படர்ந்திருந்தது.
தூரத்தில்
என் கண்ணீர்த் துளிகளில் நனைந்து
கிடந்தது
உன் மணவோலை!!

(கடைசி பத்தியை இப்படியும் மாற்றிப் படிக்கலாம்)


உன்னருகில் இற‌க்கி வைத்திருந்த
வெந்நீர் பாத்திரத்தில் கையை விடப் போ......

அலறிய‌ என் அலாரத்தை நிறுத்திவிட்டு
மெல்ல மணி பார்த்தேன்.
மாலை 5.30!

இன்று எப்படியாவது
அவளிடம் சொல்லிவிட வேண்டும்
என் காதலை
எந்த பதற்றமுமின்றி!

மனதுக்குள் சொல்லிக்கொண்டு
அவசரமாய் கிள‌ம்பினேன்
அவள் கன்னங்களையொத்த‌
ஓர் ரோஜாவை ஏந்திக்கொண்டு!!

நாய்ப்பிழைப்பு

ஓடும் ரயிலை
ஓடிப் பிடித்ததில்
வசதியாய் கிடைத்து ஓர் இருக்கை.

என் அருகே, தினசரியை புரட்டியபடி
உலகப் பொருளாதாரம் முதல்
உள்ளூர் விவகாரம் வரை
அனைத்தையும் அலசிக்கொண்டிருந்தார்
என் அலுவலக நண்பரொருவர்.

"தெரியுமா?
நடனக் கலைஞரின் கையுறை ஒன்று
நாலு கோடிக்கு ஏலம் போனதாம்!
.....
.....
இங்க பாரு கொடுமைய..,
சாப்பாட்டுக்கு வழியில்லாம‌
தந்தையும்,மகளும் பட்டினிச் சாவாம்"

இரண்டையும்
எந்த வேறுபாடுமில்லாமல்
சொன்னவரிடம்,

"தனியொரு மனிதனுக்கு உணவில்லையெனில்.."
அவசர, அவசரமாய் ஞாபகத்திற்கு வந்த‌
பாரதியின் வரியை அடக்கிக் கொண்டு
அவரிடம் கேட்டேன்..,

"சார், அஞ்சு நிமிஷம் ஆபிசுக்கு லேட்டாயிட்டா
ஹாப்ப டே லீவா ஆக்கிடமாட்டாங்களே"


" கடந்த வாரம் அல்லது 15 நாள்கள் இருக்கலாம், தினசரி ஒன்றில் நான் படிக்க நேர்ந்த செய்தி தான் அது "தந்தையும், மகளும் பட்டினியால் இறந்தனர்" என்பது. ஒருவேளைப் பசியே நம்மை பாடாய்படுத்தும் போது, 'பசியால் மரணம்' என்னை அதிர்ச்சியுறச் செய்தது.வேறேதும் செய்ய இயலாத நான், அதையே சற்று கற்பனைக் கலந்து கவிதையாக்க முயன்றுள்ளேன். ."

பகுத்தறிவுவாதி

அரசு அறிவிப்பு 1:

"மின்சார வெட்டு
குறைந்தபட்சம்
நகரங்களில் 2 மணி நேரம்
கிராமங்களில் 6 மணி நேரம்"

மக்களின் சமாதானம்:
" நல்ல வேளை,
மெழுகுவர்த்தியும்
கொசுவர்த்தியும்
விலையேறவில்லை
மற்றபடி மேட்ச் தான் பார்க்க முடியாது"

அரசு அறிவிப்பு 2:
" மளிகைப் பொருள்களின்
விலை உயர்வு"

மக்களின் சமாதானம்:
"கிலோ அரிசி ரூ.1/‍ தான்"

அரசு அறிவிப்பு 3:

பெட்ரோல் விலை உயர்வு

மக்களின் சமாதானம்:

டீசல் விலை உயரவில்லை

செய்தி :
"கோடிகளில் நஷ்டம்;
வரலாறு காணாத‌ ஊழல்"

மக்களின் சமாதானம்:

"யார் தான் செய்யவில்லை"

செய்தி:
" ஓட்டுக்கு இனி காசு இல்லை"
சொன்னவனின் சட்டையைப் பிடித்து
ஓங்கிக் கேட்டான்,
இனமானத் தமிழன்
பகுத்தறிவுப் பகலவனின் வாரிசு
"ஏன்?" என்று