Tuesday, October 5, 2010

மழைக் காலம் !

ஒரு மழைக்கால
மாலைவேளையில்
மரத்தடியில் அமர்ந்திருந்தோம் நாம்!

நாமிருவரும் மௌனத்தை
அழகாய் நெய்து கொண்டிருக்கையில்,

நமக்கான வார்த்தைகளை
சத்தமாய்ப் பேசிக்கொண்டிருந்தது மழை!

தோழி !

அறிவேன் தோழி,
நான் ஒரு தீக்குச்சி சூரியன் என்று!
என்னுள் இருக்கும் வெப்பமும்
எனக்கு தெரியும்!

பற்றி எரிய எனக்கு
பாஸ்பரஸ் தேவையில்லை,
பரஸ்பரம் பேசி கொள்ள
உன் நட்பு போதும்!

மண்ணோடு மண்ணாக புதைந்துவிட்ட
ஆலமர விதை நான்!
என்க்கு நட்பு என்னும் நீரூற்றி
அக்கறை எனும் வேலி கட்டுகிறாய்.

நிச்சயம் ஒரு நாள்- நான்
விழுதுகள் இறக்கி விருட்சமாவேன்!
அப்போது இந்த உலகிற்கு சொல்வேன்
இந்த மரத்தின் வேர் - நீ என்று!!

'சிங்கம், தான் ஒரு சிங்கம் என்று
உணராதவரை ஒருபோதும்
கர்ஜிக்கமுடியாது!!'

இப்போது புரிகிறது
உனது தன்னம்பிக்கை போதனை.
இனி நான் இந்த உலகை வெல்வேன் அதை
விரைவில் உனக்கு சொல்வேன்!!

மௌன வார்த்தைகள் !

கரைகளில் அமர்ந்தபடி
பார்த்துக்கொண்டிருந்தோம்
நம் மனதின் வார்த்தைகள்
அலைகளில் பயணித்து
கடலேறிச் செல்வதை !


என் வார்த்தைகள்
ஜெயிக்க வேண்டுமென்று நீயும்
உன் வார்த்தைகள்
ஜெயிக்கவேண்டுமென்று நானும்
போட்டியின் முடிவை
படபடப்போடு
பார்த்துக்கொண்டிருந்தாலும்..,

உன் ஒரு கையால்
மணல் அள்ளி
அம்மணலிலேயே
போட்டுக்கொண்டிருந்தாய் -
கடலிலிருந்து நீர் அள்ளி
மீண்டும் அக்கடலிலேயே
கொட்டிவிடும் மழை மேகம் போல!

விடை தெரிந்திருந்தும்
சிறு குழந்தை போல
சட்டென்று நீ கேட்டாய்
'மதியத்தில் மட்டும் ஏனிந்த மணல்
இப்படி சுடுகின்றது' என்று!

நான் சொன்னேன்

'உன் பாதச்சுவடுப்படாத
தங்கள் மேல்
உன் நிழலின்
சுவடாவது படுகின்றதே
என்று அவைகள்
சந்தோஷப்பட்டுக்கொண்டிருக்க
நீயோ நண்பகல் வந்தால்...
அந்த கோபத்தினால் தான் சுடுகின்றது' என்று.

சற்றே முறைத்தபடி
"உங்கள..." என்று செல்லமாய்
அடிக்க வந்தாய்!

அடுத்த நொடியே
மணல் சுட ஆரம்பித்தது.

இந்த மாலை நேரத்தில்
இப்படி மணல் சுட
என் மேல் அவைகளுக்குண்டான
பொறாமையே காரணம்!!

அந்தி செவ்வானம்!

ஆயிரம் சம்பாஷணைகள்
உள்ளுக்குள் ஓடிக்கொண்டிருந்தாலும்
மெளனத்தை பேசவிட்டு விட்டு,
சாலையோரமாய்
சென்று கொண்டிருந்தோம் நாம்!

'விடுகதை ஒன்று கேட்கட்டுமா?' என்றபடியே,
மரங்களில் எது ஆண் மரம்
தெரியுமா என்றாய்? '
காற்றோடு விளையாடிக்கொண்டிருந்த
உன் காதோர முடியை சரிசெய்தபடி..!

நான் சொன்னேன்
'தெரியாது' என்று!

நீ சொன்னாய்,
ஆலமரம்தான் அது,
ஏனென்றால் அதுதான்
விழுதுகள் எனும்
தாடி வளர்த்திருக்கிறதே'
என்றாய் சிரித்தபடி!

சற்றே பயந்தாற்போல்
நான் சொன்னேன்,
'இப்படி கன்னத்தில் குழிவிழ
அழகாய்
நீ சிரிப்பதை பார்த்தால்
எல்லா மரங்களுமே
ஆணாகிவிட கூடுமென்று...!'

சட்டென்று
உன் கன்னம் சிவந்து
மறைந்ததை
பொறாமையோடு
பார்த்துக்கொண்டிருந்தது
அந்தி செவ்வானம்!!!

கனவு வீடு!

கயிற்றின் மேல்
நடப்பதை போல - மிக
கவனமானது
உன்னோடான எனது உறவு!

இலவமா? ஈச்சமா?
தெரியாமலே
காத்திருக்க தொடங்கிவிட்டேன்
உன்னோடு வாழ...

மணப்பாயா?
மறுதலிப்பாயா?
படபடக்கும் இதயத்தோடு
பார்த்துக்கொண்டே இருக்கின்றேன்
நீ வரும் பாதையை....

ஒருவேளை..,
நீ வராவிட்டாலும் கூட
தயவுசெய்து கலைத்துவிடாதே..,

கடற்கரையில்
நம் குழந்தைகளோடு
நான் கட்டிக்கொண்டிருக்கும்
எனது "கனவு வீட்டை"!!

மழைக் காதலி !

அலுவலகம் முடிந்தவுடன்
ஆசையாய் வீடு திரும்பினேன்,
உன்னை பார்ப்பதற்காக!

எனக்கு முன்பே
வந்துவிட்ட நீ,

குடையிருந்தும்
மழையில் நனைந்ததை
என்னிடம் மறைப்பதற்காக
குளித்துவிட்டு
ஈரக் கூந்தலோடு
அமர்ந்திருந்தாய்
ஜன்னலின் முன்பு,
கண்களை மூடியபடி!!

இதென்ன மழையோடு ஓர் கண்ணாமூச்சி?

மழையை பார்க்க வேண்டும்,
கேட்ககூடாதென்றேன்
மூடியிருந்த உன் கண்களை
என் கைகளால் மூடியபடி!

நீ சொன்னாய்,
இல்லை,

"சுழலுகின்ற பூமியின் மீது
மழையின் ஊசிக்கரங்கள்
தொடும்போதெல்லாம்
பூமி தன்னுள் ஒளிந்திருக்கும் மெல்லிசையை
வெளிப்படுத்துகிறது ஒரு
இசைத்தட்டைப் போல"
என்றாய்!

இதை நீ சொல்லி முடித்தவுடன்,
பலத்த கைத்தட்டல் ஓசையோடு
பொழியத் தொடங்கியது மழை
என் மனதிற்குள்ளும்!!


ஊஞ்சல் !

மழை ஓய்ந்த - ஓர்
மார்கழி மாதத்து மாலை நேரம்

மழைப் பாட்டை பாடியபடி,
சுற்றி அமர்ந்து
பனிக்காற்று
குளிர் காய்ந்து கொண்டிருந்த ஒரு
தெரு விளக்கின் கீழ்
நடந்து கொண்டிருந்தோம்!

'ரொம்ப குளிருதுல்ல..' என்றாய்,
இரண்டு கைகளையும்
குறுக்கியபடி.

சட்டென்று கூக்குரல்
ஒன்று கேட்டது..

அது வேறொன்றுமில்லை
இவ்வளவு நேரமாய் - நீ
கைகளை வீசி
நடந்து கொண்டிருந்ததால்,
உன் கையின் நிழலை
ஊஞ்சலாட்டிக் கொண்டிருந்த
என் கைநிழல் - சட்டென்று
உன் கைநிழல் காணாமல் போய்விட்டதால்
எழுப்பிய கூக்குரல்தான் அது
என்று தெரிந்ததும்

அதை சமாதானப்படுத்த - நீ
உன் கை நிழலின் மடியில்
அமரவைத்தாய்
என் கையின் நிழலை!!